தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு
எதிராக காந்தியடிகள்
நடத்திய சத்தியாகிரக
போராட்டத்தில் தனது பதினாறாவது வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு
எதிராகப் போராடி
உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’வள்ளியம்மை.
ஒரு பெண்ணாக,
தமிழராக, இந்தியராக
என பல
பரிமாணத்தில் பெருமை சேர்த்தவர் வள்ளியம்மை.
வெள்ளையர்கள் தென்னாப்பிரிக்காவை அடிமைப்படுத்தி, தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக்
கொண்டிருந்த காலம். தென்னாப்பிரிக்க மண்ணில் கரும்பு
போன்றவற்றைப் பயிரிட விரும்பிய வெள்ளையர்கள், பயிர்த்தொழில்
தெரிந்த அடிமைகளைத்
தேடி அலைந்தனர்.
அங்கிருந்த தென்னாப்பிரிக்க நீக்ரோ தொழிலாளர்களோ அடிக்கடி
வெள்ளை முதலாளிகளோடு
முரட்டுத்தனமாக சண்டையிட்டு வந்தனர். அதனால் தங்களது
ஆதிக்கத்தில் இருந்த இந்தியா போன்ற பிற
காலனி நாடுகளிலிருந்து
பண்ணைத் தொழிலுக்கேற்ற
கூலிகளை இறக்குமதி
செய்துகொண்டனர்.
அப்படி ஒரு கூலித்
தொழிலாளியாக தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த
தில்லையாடி என்ற கிராமத்திலிருந்து கப்பலேறி தென்னாப்பிரிக்காவிற்கு
தன் மனைவி
மங்களத்துடன் சென்றவர்தான் முனுசாமி முதலியார்.
பிறப்பு:
நெசவுத் தொழிலாளியான முனுசாமி,
பிரித்தானிய ஆட்சியில் ஒரு கூலித் தொழிலாளியாக
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில்
ஒரு சிறிய
வியாபாரத்தைத் தொடங்கினார். அங்கு தான் பிப்ரவரி
22. 1898 ஆம் ஆண்டு வள்ளியம்மை பிறந்தார்.
எதிர்கால இன்பக் கனவுகளோடு
தென்னாப்பிரிக்கா சென்ற இந்தியத் தொழிலாளர்கள் அங்கே
வெள்ளையர்களால் அடிமைகளாக நடத்தப்பட்டனர். இந்தியர் ஒவ்வொருவரும்
அங்கே வாழ
3 பவுன் வரி
செலுத்தினால்தான் அங்கே வாழ முடியும். வாக்குரிமை
கிடையாது. அனுமதியின்றி
குறிப்பிட்ட பகுதிகளுக்குள் நுழையக்கூடாது.
வெள்ளையர் பள்ளிகளில்
படிக்கமுடியாது. வெள்ளையர்களுடன் சமமாக அமர்ந்து பயணம்
செய்யக்கூடாது, கிறிஸ்துவ மதப்படி நடந்த திருமணங்கள்தான்
செல்லும் இப்படியெல்லாம்
ஒடுக்கப்பட்ட இந்தியக்குடிகள் வாழும் பகுதிகள் சேரிகளாகப்பட்டன.
சுகாதார வசதியின்றி
நோய்களும் பரவின.
இந்தச் சூழலில்தான் 1893 ஆம் ஆண்டு மோகன்தாஸ் கரம்சந்த்
காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு
சென்றார். தாதா
அப்துல்லா கம்பெனிக்கான
வழக்குகளை ஓராண்டிற்குள்
முடித்துத் திரும்பும் எண்ணத்துடன் சென்றவர், அங்கே
இந்தியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு மனம்
பதறினார். அதை
எதிர்த்துப் போராடவும், இந்தியர்களின் உரிமைகளை மீட்டுத்
தரவும் துணிந்தார்.
அப்போது தென்னாப்பிரிக்க ‘கேப்’ உச்சநீதிமன்ற நீதிபதி ஒரு
தீர்ப்பு கொடுத்தார்.
அந்த நாட்டில்
இனி ‘கிறிஸ்தவ
சடங்குப்படியும், திருமணப் பதிவாளர் சட்டப்படியும் நடக்கும்
திருமணங்கள் மட்டுமே செல்லும். மற்ற எந்தத்
திருமணமும் செல்லாது’ என்பதே அந்தத் தீர்ப்பு.
இதனால் அங்குள்ள இந்திய
மக்கள் தங்கள்
மத வழக்கப்படி
செய்து கொண்ட
திருமணங்கள் அனைத்தும் செல்லாது என்றும், அவர்கள்
குழந்தைகளுக்கும் சட்டப்படியான வாரிசு உரிமை இல்லை
என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பினைக்
கண்டு இந்திய
வம்சாவளியினர் கிளர்ச்சியில் இறங்கினர். காந்திஜி இவர்களை
ஒன்றிணைத்து இயக்கமாக்கி, போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார்.
அந்தச் சமயத்தில் இந்தியர்கள்
சார்பில் நடத்தப்பட்ட
எல்லா பொதுக்
கூட்டங்களுக்கும் தன் தாயாருடன் சிறுமி
வள்ளியம்மை சென்று வந்தாள். காந்தியின் சொற்பொழிவுகள்
வள்ளியம்மை நெஞ்சில் ஆழப்பதிந்தன. விடுதலைக் கனலை
விரைந்து மூட்டின.
புதிதாக இந்தியர்கள் குடியேறுவதைத்
தடுக்க டிரான்ஸ்வாலுக்குள்
குடியிருந்த ஒவ்வொரு இந்தியரின் விரல் ரேகையும்
பதிவு செய்யப்பட்டது.
இது வள்ளியம்மையின்
தன்மான உணர்வைத்
தாக்கியது. வெள்ளையரின் நிறவெறியை எதிர்த்து அண்ணல்
காந்தியின் அறப்போரில் தன்னையும் இணைத்துக் கொண்டாள்
வள்ளியம்மை.
அதுவரை, போராட்டங்களில் பெண்கள்
ஈடுபட வேண்டாம்
என்று தடுத்து
வந்த காந்திஜி,
இந்தப் போராட்டத்தில்
பெண்களையும் சேர்த்துக் கொண்டார். ஏனெனில், ‘‘இந்த
திருமணச்சட்டம் பெண்களை நேரடியாக பாதிக்கக் கூடியது.
கட்டிய மனைவியையே
அங்கீகாரமில்லாத நிலைக்கு ஆளாக்கி, குழந்தைகளின் வாழ்வுரிமையையும்
பறிக்கும் வன்கொடுமைச்
சட்டம் இது’’
என்றார் காந்தி.
1913 ஆம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க்
நகரில் பெண்களின்
சத்தியாகிரகப் போர்ப்படை கூடியது. ஆவேச முழக்கத்துடன்
ஆங்கில அரசின்
நிறவெறித் திமிருக்கு
எதிராக அணி
திரண்டு கிளம்பியது.
அணியின் முதல்
வரிசையில் நின்ற
மூன்று பெண்மணிகள்
கஸ்தூரிபா, வள்ளியம்மை, வள்ளியம்மையின்
தாயார்.
‘வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்!’
என்று வள்ளியம்மை
முன் வரிசையில்
நின்று முழங்கிய
முழக்கம் ஏனைய
சத்தியாகிரகிகளை எழுச்சிகொள்ளச் செய்தது! ‘எங்கள் தேசத்தில்
சூரியன் அஸ்தமிப்பதில்லை’
என்று பிரிட்டிஷ்
அரசு பேசி
வந்த ஆணவத்திற்கு
அன்றுதான் அஸ்தமனம்
தொடங்கியது. காலனி ஆதிக்கத்தின் கட்டுப்பாட்டில் அழுந்திக்
கிடந்த ஒரு
சமூகம் அன்றுதான்
வீறிட்டெழுந்தது.
ஊர்வலம் ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து
நியூகாசில் நகருக்கு வள்ளியம்மையின் சங்கநாத முழக்கத்துடன்
முன்னேறியது.
நியூகாசில் போகும் வழியில்
சார்லஸ் டவுன்,
டண்டி, லேடிமிஸ்த்,
மாரிட்ஸ் பர்க்,
டர்பன் போன்ற
முக்கிய இடங்களில்
சத்தியாக்கிரகிகள் தங்கிச் சென்றபோது,
தன் இளவயது
காரணமாக ஓடியாடி,
தன் உடன்
வந்த சத்தியாகிரகிகளுக்கு
வள்ளியம்மைதான் இயன்றவரை தொண்டு செய்தாள்.
நியூகாசில் நகர நிலக்கரிச்
சுரங்கத் தொழிலாளர்களில்
பெரும்பாலோர் தமிழர்கள். அவர்களை வேலை நிறுத்தம்
செய்யுமாறு முழங்கினார் காந்தி. உடனடியாக வேலை
நிறுத்தம் செய்தனர்.
தமது தமிழ்மக்களின்
ஒத்துழைப்பைக் கண்டு மேலும் உற்சாகமானாள் வள்ளியம்மை.
போராட்டப் பெண்கள் தடையை
மீறி டிரான்ஸ்வால்
நகர எல்லைக்குள்
நுழைந்தபோது, எல்லோரும் கைது செய்யப்பட்டு 1913 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
மூன்று மாதக்
கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு அனைவரும்சிறையில் அடைக்கப்பட்டனர்.
பதினாறு வயதான வள்ளியம்மையும்
கடுங்காவல் தண்டனையை ஏற்று சிறைக்குச் சென்றாள்.
ஆனால் சிறை
அதிகாரிகளோ அவளிடம் கடுமையாக வேலை வாங்கினார்கள்.
சிறையிலே சுகாதாரக்
கேடான சூழ்நிலை.
சிறை அறையில்
தலைமாட்டிலே ஒரு மண்சட்டி, அதற்கொரு மூடி,
அதிலேதான் மலஜலம்
கழித்துக்கொள்ள வேண்டும். காலையில் தூங்கி எழுந்ததும்
அதைக்கொண்டு போய் போட்டுவிட்டு, சட்டியைச் சுத்தம்
செய்துகொண்டு வரவேண்டும். தகுந்த மருத்துவ வசதியும்
இல்லை.
மெலிந்த தேகம் கொண்ட
வள்ளியம்மை நோய்க்கு ஆளானாள். உடல்நலம் பாதிக்கப்பட்டாள்.
‘‘உரிய அபராதத்
தொகை கட்டிவிட்டு
சிறையிலிருந்து விடுதலை பெற்றுச் செல்’’ என்றான்
வெள்ளை மனம்
இல்லா வெள்ளைக்கார
சிறை அதிகாரி.
‘‘அது சத்தியாகிரகப் போராளிக்கு
இழுக்கு. செத்தாலும்
சிறையிலேதான் சாவேன். அரசு விதித்த அபராதத்
தொகையைக் கட்டமாட்டேன்’’
என்று மறுத்துவிட்டாள்
வள்ளியம்மை.
அடுத்த சில நாட்களில்
அவளது உடல்நிலை
மேலும் மோசமடைந்தது.
அவள் கவலைக்கிடமான
நிலைமைக்கு ஆளாகி விட்டதாக மருத்துவர்கள் எச்சரித்தனர்.
அதனால், தண்டனைக்
காலம் முடியும்
முன்பே, அவசரம்
அவசரமாக வள்ளியம்மை
1914 ஆம் ஆண்டு
பிப்ரவரி 11 ஆம் நாள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
மிகவும் பலவீனமான
நிலையில் இருந்த
அவளை ஒரு
ஜமுக்காளத்தில் கிடத்தி வீட்டிற்குக் கொண்டு சென்றனர்.
மறைவு:
விடுதலை வேள்வியை ஏற்றி
வைத்த அந்தத்
தீபம், பத்தே
நாள்களில் அதாவது
22.02.1914-ல் அணைந்து போனது. ஆனால், போராட்டம்
வலுப்பெற்றது. தன்னலம் கருதாமல் போராடிய இளம்
வள்ளியம்மையின் மறைவு காந்தியை வெகுவாகப் பாதித்தது.
‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையில்
காந்தி ‘‘இந்தியாவின்
புனிதமகள் ஒருத்தியை
இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல்
தனது கடமையைச்
செய்தவள் அவள்.
மாதர்களுக்கே உரிய துன்பத்தைச் சகிக்கும் மனோபலமும்,
தன்மானமும் கொண்டவள்! அவளது தியாகம் இந்திய
சமூகத்திற்கு நிச்சயம் பலனளிக்கும்!’’என்று மனமுருகி
எழுதினார்.
ஜோகன்ஸ்பர்க்கில் வள்ளியம்மை அடக்கம்
செய்யப்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்றை
எழுப்பினார் காந்தி. வாழ்நாள் முழுவதும் வள்ளியம்மையைப்
பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
தனது சுயசரிதையில் பல
இடங்களில் வள்ளியம்மையை
நினைவுகூர்ந்து துக்கம் தாங்காமல் எழுதுகிறார் காந்தி.
தன் உயிரைக் காத்த
வள்ளியம்மையை காந்தியால் எப்படி மறக்கமுடியும்? ஆம்!
ஒருமுறை சத்தியாகிரகப்
போராட்டத்தின்போது, வெறிபிடித்த வெள்ளையன்
ஒருவன் காந்திஜியைச்
சுட துப்பாக்கியை
உயர்த்திய போது,
வள்ளியம்மை திடீரென்று ஓடிவந்து காந்தியின் முன்னால்
நின்று கொண்டு,
‘‘இப்போது காந்தியைச்
சுடு, பார்க்கலாம்!’’
என்றாள் ஆவேசமாக!
அவளது நெஞ்சுரம்
கண்டு அந்த
வெள்ளையனே திகைத்து,
திரும்பிப் போனான் என்றும் மேலும் இந்தியா
உள்ளவரையில் தென்னாப்பிரிக்க சத்தியாகிரக
சரித்திரத்தில் வள்ளியம்மாவின் பெயரும் நீங்கா இடம்
பெற்றிருக்கும்" என்று காந்தி
குறிப்பிட்டிருந்தார்.
ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி,
உயிர் விட்ட
முதல் போராட்டக்காரர்
தில்லையாடி வள்ளியம்மை. பதினாறே ஆண்டுகள் மட்டுமே
வாழ்ந்த அவரை
"பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட
தில்லையாடி வள்ளியம்மை அவர்கள்தாம் எனக்கு முதன்
முதலில் விடுதலை
உணர்வை ஊட்டிய
பெருமைக்குரியவர்" என காந்தி
பாராட்டியுள்ளார்.
காந்திஜி தமிழகத்தில் சுற்றுப்பயணம்
மேற்கொண்டபோது எல்லாக் கூட்டங்களிலும் வள்ளியம்மையின் தியாகத்தைக்
குறித்துப் பேசினார். அவள் பிறந்த தில்லையாடி
கிராமத்திற்குச் சென்று, அவளது உறவினர்களைச் சந்தித்துப்
பேசினார்.
"தென்னாப்பிரிக்காவில்
வெள்ளையனின் துப்பாக்கி முன்பாக துணிச்சலுடன் எதிர்நின்று
அன்று தன்னைக்
காப்பாற்றிய வள்ளியம்மை இன்று இந்தியன் கோட்ஸே
சுட்டுக் கொல்லும்போது
குறுக்கே பாய்ந்து
காப்பாற்ற நம்மருகே
இல்லையே....!" என்று காந்தி
தனது கடைசி
மூச்சின்போது நினைத்திருப்பாரோ...?
1997-ல், வள்ளியம்மையின் நூற்றாண்டின்போது
ஜோகன்ஸ்பர்க் நகரில் நெல்சன் மண்டேலா முயற்சியால்
வள்ளியம்மையின் கல்லறை புதுப்பிக்கப்பட்டு விழா எடுக்கப்பட்டது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி
உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’ வள்ளியம்மை,
ஒரு தமிழ்ப்
பெண் என்பது
நமக்கு மற்றொரு
பெருமைதானே!
நினைவு மண்டபம்:
தமிழக அரசு தில்லையாடி
வள்ளியம்மையின் தியாகத்தைப் போற்றும் வகையில் நாகப்பட்டினம்
மாவட்டம் தரங்கம்பாடி
வட்டம் தில்லையாடி
கிராமத்தில் தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம்
அமைத்துள்ளது. அண்ணல் காந்தியடிகள் தில்லையாடிக்கு 01.05.1915 அன்று வருகை
தந்து அமர்ந்த
இடத்தில் நினைவுத்
தூண் கட்டப்பட்டுள்ளது.
அதன் எதிரில்தான்
தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு தில்லையாடி வள்ளியம்மை அவர்களின்
மார்பளவு சிலை
ஒன்று முன்
மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொது நூலகத்துறை
மூலம் ஒரு
நூலகம் செயல்பட்டு
வருகின்றது.
0 comments:
Post a Comment