கள் என்னும் பன்மை விகுதிக்கு எங்கே வலிமிகும், எங்கே வலிமிகாது என்பது பலரது ஐயம்.
கள் விகுதிக்கு எங்கும் வலி மிகாது. ஆனால் பல இடங்களில் விதிவிலக்காக வலி மிகுவதுதான் எல்லா குழப்பங்களுக்கும் காரணம்.
ஓரெழுத்து ஒருமொழியில் அமைந்த பெயர்ச்சொற்கள் பலவுண்டு. ஓரே எழுத்தால் ஆன சொற்கள். பெரும்பாலும் அவை தனி நெடிலாக இருக்கும்.
ஆ, ஈ, பூ
இவற்றோடு கள் விகுதி சேர்ந்தால் வலி மிகும்.
பூக்கள், ஈக்கள், கோக்கள்.
நெடில் எழுத்தில் முடியும் பெயர்ச்சொற்களோடு கள் விகுதி சேர்ந்தால் வலிமிகும். புறா, நிலா, திருவிழா. இப்பெயர்ச்சொற்களின் கடைசி எழுத்துகள் நெடில்களாக இருக்கின்றன. இவற்றோடு கள் விகுதி சேர்ந்தால் வலிமிகும்.
புறாக்கள், நிலாக்கள், திருவிழாக்கள்
இவ்விரண்டு விதிகளில் விதி விலக்கும் உண்டு. ஐகாரத்தில் முடியும் பெயர்ச்சொற்களில் கள் விகுதிக்கு வலிமிகாது. ஐகாரங்கள் என்பவை ஐயும், ஐவரிசை எழுத்துகளும்.
கை, பை, பிழை, விதை, பண்டிகை, காணிக்கை, இச்சொற்கள் ஐகார எழுத்துகளில் முடிகின்றன. இவை நெடில் எழுத்துகள். கள் விகுதி சேர்த்தால் வலி மிகாது.
கைகள், பைகள், பிழைகள், விதைகள், பண்டிகைகள், காணிக்கைகள். இவற்றோடு கள் விகுதி சேர்ந்து வலி மிகவில்லை.
இரண்டு குறில் எழுத்துகள் இணைந்து ஜோடியாகத் தோன்றும் பெயர்ச்சொற்கள் தமிழில் மிகுதி.
பசு, அணு, வடு, புழு, படி, செடி, நதி, தறி,
குறிலிணைச் சொற்களாகிய இவற்றில் உகரத்தில் முடியும் பெயர்ச்சொற்களோடு கள் விகுதி சேர்ந்தால் வலிமிகும்.
பசுக்கள், அணுக்கள், வடுக்கள், புழுக்கள்.
இகரத்தில் முடியும் பெயர்ச்சொற்களோடு கள் விகுதி சேர்ந்தால் வலி மிகாது.
படிகள், செடிகள், நதிகள், தறிகள்.
ல் என்ற மெய்யெழுத்தில் முடியும் பெயர்ச்சொற்களோடு கள் விகுதி சேர்ந்தால் பெரும்பாலும் புணர்ந்து நிற்பதில்லை. தொழில்கள், தோல்கள், வால்கள், பரல்கள் இவை, ல் என்ற மெய்யை ஈறாகக் கொண்ட பெயர்கள். கள் விகுதி இயல்பாய்ச் சேர்ந்துகொண்டது.
கல், சொல், பல் இவை கற்கள், சொற்கள், பற்கள் என்ற புணர்வதைக் கவனியுங்கள்.
ள் என்ற மெய்யெழுத்தில் முடியும் பெயர்ச்சொற்களோடு கள் விகுதி சேர்ந்தால் புணர்வதில்லை. நாள் என்னும் சொல்லுடன் கள் விகுதி சேர்ந்தால் நாள்கள் என்று இயல்பாய் நிற்கும். நாட்கள் என்றெழுதக்கூடாது.
தோள்கள், வாள்கள் என்று எழுதுகிறோமேயன்றி தோட்கள், வாட்கள் என்றெழுதுவதில்லை.
வாட்போர், குட்குடியர் என்று புணரக்காரணம் இரண்டும் பொருள்தரும் சொற்களாகும்.
கள் என்பது இங்கே விகுதி. ஆனால் முள், புள் போன்ற குறிலையடுத்து ள் மெய்யில் முடியும் பெயர்ச்சொற்களை முட்கள், புட்கள் என்று புணர்த்தி எழுவது விதிவிலக்காக இருக்கிறது.
அவ்வாறே படகுகள், குஞ்சுகள், பருந்துகள், அம்புகள் என மென்தொடர்க் குற்றியலுகரங்களில் கள் விகுதிக்கு வலி மிகாது. ஆனால். இந்துக்கள், பந்துக்கள் என்று எழுதுவது விலக்காக ஏற்கப்படுகிறது.
Thursday, January 22, 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment